
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விஜய், ஆரம்ப வேகத்திலேயே நிர்வாக தடுமாற்றங்களில் சிக்கியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். மக்கள் மத்தியில் “மாற்றத்தின் முகம்” என்ற இமேஜை உருவாக்க முயன்றாலும், நடைமுறையில் கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கும் திமுகவின் அரசியல் சூழ்ச்சிக்கும் இடையில் சிக்கி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதற்கான முதல் எடுத்துக்காட்டாக அவரது நியமன அரசியலே மாறியுள்ளது. அவர் அறிவித்த தனிச்செயலாளர் ஜோதிடர் ரிக்கி ரத்தன் நியமனம் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுகவின் எதிர்ப்புகள் காரணமாக எந்தவித விளக்கமும் இல்லாமல் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிய சம்பவம், “விஜய் தனியாக முடிவு எடுக்க முடியாத நிலைதானா?” என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியது.
அதன் பின்னர் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடராமன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பிராமணர் என்பதையே அடிப்படையாக வைத்து சமூக வலைதளங்களில் மற்றும் சில அரசியல் வட்டாரங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அந்த விமர்சனங்கள் அதிகரித்த நிலையில் ராஜ்மோகன் கல்வித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவும் “அழுத்தத்திற்கு உடனே தலைகுனியும் அரசியல்” என்ற விமர்சனத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில் ராஜ்மோகன் குறித்து புதிய சர்ச்சையும் உருவானது. அவர் தாம் சாய் ராம் கல்லூரியில் படித்ததாக தெரிவித்திருந்தாலும், அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் அந்தக் கல்லூரியின் பெயரே இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தேர்தலுக்கு முன்பு “வேலு நாச்சியார் பெண்கள் பாதுகாப்பு படை” என்று அறிவித்த விஜய், ஆட்சி அமைந்த பிறகு அந்த பெயரை மாற்றி “சிங்க பெண் அதிரடிப்படை” என அறிவித்ததும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழகத்தின் வீர பெண்மணியான வேலு நாச்சியாரின் பெயரை ஏன் திடீரென தவிர்த்தார்? யாருடைய அழுத்தம் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்து வருகின்றன.
அதேநேரத்தில் “அனைவருக்கும் சமமான அரசு” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஓட்டு வங்கி அரசியலே முன்னிலைப்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இந்துக்களின் வாழ்வியல் முறையாக கருதப்படும் சனாதனம் குறித்து சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த உதயநிதியை கூட திறந்தவெளியில் விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு விஜய்க்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா தொடர்பாக எழுந்த சர்ச்சைகளிலும் கடுமையான நடவடிக்கை அல்லது கண்டனம் எதுவும் தெரிவிக்காதது, “ சிறுபான்மையினர் ஓட்டிற்காக வா என்று விமர்சனம் எழுந்துள்ளது
மக்கள் எதிர்பார்த்த அதிரடி தலைமையா, அல்லது கூட்டணி கட்சிகளின் தயவில் நகரும் சமரச அரசியலா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் தீவிரமாக பேசப்படுகிறது. ஆரம்பத்திலேயே தொடர்ந்து பின்வாங்கும் சம்பவங்கள் நிகழ்வதால், “விஜய் உண்மையில் தனித்த முடிவெடுக்கும் தலைவரா?” என்ற சந்தேகம் அவரின் ஆதரவாளர்களிடையே கூட எழ ஆரம்பித்துள்ளது.
