
உலக அளவில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் ஓபெக் அமைப்பிலிருந்து வெளியேற எடுத்துள்ள முடிவு உலகளாவிய எரிசக்தி அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இந்தத் தன்னிச்சையான முடிவு பாரதத்திற்கு மிகப்பெரிய சாதகமாக அமையப் போகிறது என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்த போதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் சாமானிய மக்களைப் பாதிக்காத வகையில் மோடி அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. 140 கோடி மக்களின் நலனை முன்னிறுத்தி, சர்வதேச சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் நிலையாகப் பராமரித்து வருவதுடன், எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் விநியோகச் சங்கிலியை அரசு உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைத் தங்களுக்குச் சாதகமாக வைத்திருக்க உற்பத்தியைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில ஆண்டுகளில் தனது எண்ணெய் உற்பத்தித் திறனைப் பெருமளவு அதிகரிப்பதற்காக உட்கட்டமைப்புகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஓபெக் அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தால் தான் உருவாக்கியுள்ள இந்த முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்த முடியாது என்பதாலும், அதன் காரணமாகத் தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதாலும், அந்த அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாகச் செயல்படும் முடிவை அமீரகம் மேற்கொண்டுள்ளது.
ஓபெக் கூட்டமைப்பின் பிடியிலிருந்து அமீரகம் விடுபடும்போது, சந்தையில் கச்சா எண்ணெயின் விநியோகம் அதிகரித்து சர்வதேச அளவில் விலை குறைய வழிவகுக்கும். இந்தியா தனது எரிசக்தி தேவையில் பெரும் பகுதியை இறக்குமதியையே சார்ந்துள்ள நிலையில், இந்த விலை வீழ்ச்சி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும். ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து சாமர்த்தியமாக எண்ணெய் பெற்று வரும் பாரதம், இப்போது அமீரகத்தின் இந்த முடிவின் மூலம் தனது எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும். 140 கோடி மக்களின் அன்றாடத் தேவைகளைப் பாதிப்பின்றி பூர்த்தி செய்யத் துடிக்கும் மோடி அரசுக்கு, அமீரகத்தின் இந்தத் தன்னிச்சையான முடிவு ஒரு வலிமையான பாதுகாப்பு அரணாக அமைந்து, இந்தியப் பொருளாதாரத்தின் அதிவேக வளர்ச்சியைத் தங்குதடையின்றி உறுதி செய்யும். இவ்வாறு உலக நாடுகளின் எண்ணெய் சந்தையில் உருவாகும் ஆரோக்கியமான போட்டி, பாரதத்தின் எரிசக்தி தேவையை மலிவாகவும் தடையின்றியும் பூர்த்தி செய்ய ஒரு பொன்னான வாய்ப்பாக மாறப்போகிறது.
