
இந்தியாவின் சட்ட வரலாற்றில் சில வழக்குகள் சாதாரண தீர்ப்புகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் அடிப்படை தத்துவத்தையே கேள்விக்குறியாக்கும் முக்கியமான திருப்புமுனைகளாக மாறுகின்றன. அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் மையமாக திகழ்கிறது. இந்த கோயிலின் வழிபாட்டு முறை, குறிப்பாக 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழையாத பாரம்பரியம், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நடைமுறை, ஐயப்பனின் "நைஷ்டிக பிரம்மச்சாரி" என்ற தனித்துவமான தெய்வ அடையாளத்துடன் தொடர்புடையதாக பக்தர்கள் வாதிடுகின்றனர்.
2018ஆம் ஆண்டு, இந்திய உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற வரலாற்று தீர்ப்பை வழங்கியது.. ஒருபுறம் பெண்களின் சமத்துவ உரிமையை ஆதரிப்பவர்கள் அதை வரவேற்றனர். மறுபுறம், பக்தர்கள் அந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்தனர். இதனை அடுத்து பல மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது, 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகிறது
இந்த விசாரணை இன்று ஒரு சாதாரண சட்டப் போராட்டமாக இல்லை, இது இந்தியாவின் அடிப்படை சிந்தனையை சோதிக்கும் தருணமாக மாறியுள்ளது. சாய் தீபக் என்ற வழக்கறிஞரின் குரல், இந்த வழக்கை முற்றிலும் வேறு நிலைக்கு கொண்டு சென்றது. மூன்று மணி நேரம் இடைவிடாமல் நின்று அவர் முன்வைத்த வாதங்கள், மத சுதந்திரத்தின் தத்துவமாகவே பலரால் பார்க்கப்பட்டது. கடவுளை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை தீர்மானிப்பது யார், பக்தர்களா அல்லது நீதிமன்றமா என்ற கேள்வி நீதிமன்ற அரங்கையே சிந்திக்க வைத்தது. Supreme Court of India முன்னிலையில் அவர் கூறிய “நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாகவும் செய்ய முடியாது” என்ற ஒரு வரி, இந்த முழு விவாதத்தின் மையமாக மாறியது. மத நடைமுறைகள் அதன் புனித தன்மையால் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட முடியாது, அரசு அதை சட்டமாக்கினாலும் அதன் இயல்பு மாறாது என்ற அவரது நிலைப்பாடு, நீதித்துறையின் எல்லைகளை நேரடியாக சவால் செய்தது.
அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 இடையிலான வித்தியாசத்தை அவர் மிகத் தெளிவாக முன்வைத்தார், தனிநபரின் மத சுதந்திரம் ஒரு விஷயம், ஆனால் மத அமைப்பின் தன்னாட்சி முற்றிலும் வேறொரு விஷயம், இந்த இரண்டையும் கலக்க முயல்வது அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றும் முயற்சியாக அவர் விளக்கினார்.
அரசு சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த எல்லையை தாண்ட முயன்றால் அது ஒரு “ட்ரோஜன் குதிரை” போல இருக்கும் என்ற அவரது கருத்து, நீதிமன்றத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத அமைப்புகளின் உள்ளக விவகாரங்களில் வெளிப்புற தலையீடு எவ்வளவு வரை செல்ல வேண்டும் என்ற கேள்வி இந்த வழக்கின் மையமாக நின்று கொண்டிருக்கிறது.
