24 special

ஐயப்பன் சொத்தில் கைவைத்த கும்பலை வேரறுக்கும் ED: அம்பத்தூர் முதல் திருவனந்தபுரம் வரை அலறும் ஊழல் திமிங்கலங்கள்

MKSTALIN
MKSTALIN

இந்தியாவின் ஆன்மீக அடையாளமாகவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாகவும் விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதப் பொருட்களிலேயே கைவரிசை காட்டிய கும்பலின் முகத்திரையை மத்திய அமலாக்கத்துறை (ED) இன்று கிழித்தெறிந்துள்ளது. 2019-ம் ஆண்டு சபரிமலை புனரமைப்புப் பணிகள் நடந்தபோது, கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக சுமார் 4 கிலோவுக்கும் அதிகமான சுத்தத் தங்கம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. புனிதமான கவசங்களைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாக சாதாரணத் தாமிரத் தகடுகளைப் பொருத்தி, அதன் மேல் தங்க முலாம் பூசி பக்தர்களையும், இறைவனையும் ஏமாற்றிய இந்தத் துரோகம் இன்று நாடு தழுவிய சோதனையாக வெடித்திருக்கிறது.


இந்தக் கொள்ளைச் சதியின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அதிகார வர்க்கமே ஒளிந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர்களான அ.பத்மகுமார், என். வாசு மற்றும் செயல் அலுவலர் சுதீஷ்குமார் ஆகியோர் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தப் புனிதப் பணியைத் தங்களுக்குச் சாதகமானவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதில் அதிர்ச்சியின் உச்சமாக, கோவிலின் ஆகம விதிகளைக் காக்க வேண்டிய தந்திரி கண்டரரு ராஜீவரு என்பவரே இந்தக் கூட்டுச்சதியில் இணைந்திருப்பது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் இணைந்து பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் ஆகியோர் இந்தத் தங்கத்தை முறையற்ற வகையில் கையாண்டுள்ளனர்.

இந்தத் திருட்டுப் பாதையின் முக்கியக் கண்ணியாக விளங்குவது சென்னை அம்பத்தூரில் உள்ள 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' (Smart Creations) என்ற தனியார் நிறுவனம். இதன் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, தங்கக் கவசங்களில் இருந்த சுத்தத் தங்கத்தைப் பிரித்தெடுத்துவிட்டு, போலித் தகடுகளைப் பொருத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தங்கத்தை உருக்கி விற்க திண்டுக்கல்லைச் சேர்ந்த மணி என்பவரும் உதவியுள்ளார். இன்று தமிழகம், கேரளா மற்றும் பெங்களூரு என மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் ரகசியப் பணப் பரிமாற்ற விபரங்கள் சிக்கியுள்ளன. இது வெறும் சாதாரணத் திருட்டு அல்ல, ஒரு திட்டமிடப்பட்ட "நிழல் உலகப் பொருளாதாரக் குற்றமாகும்."

கேரள உயர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையில் எடுத்துள்ளது. சாதாரண போலீஸ் விசாரணையில் தப்பித்துவிடலாம் என நினைத்த ஊழல் அதிகாரிகளுக்கு, 'பணமோசடி தடுப்புச் சட்டம்' (PMLA) ஒரு சிம்மசொப்பனமாக மாறியுள்ளது. ஐயப்பனின் சொத்தைத் திருடிச் சேர்த்த ஒவ்வொரு ரூபாயையும் முடக்குவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்பதற்கு அப்பாற்பட்டு, "தெய்வக் குத்தம் தண்டனையாக மாறும்" என்பதை மோடி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை நிரூபித்துள்ளது. அம்பத்தூர் முதல் திருவனந்தபுரம் வரை விரிந்துள்ள இந்த ஊழல் சாம்ராஜ்யத்தின் வேர்களை அறுத்தெறிவதே அமலாக்கத்துறையின் இந்த மின்னல் வேக சோதனையின் இறுதி இலக்காகும்.