Tamilnadu

சென்னை டு கோவை ரயிலில் இளைஞர்கள் இளம்பெண் செய்த மோசமான செயல் அம்பலப்படுத்திய பிரபல எழுத்தாளர் !

amaruvi
amaruvi

சென்னையிலிருந்து  கோவை செல்லும் ரயிலியல் பயணத்தின் போது நடந்த கசப்பான சம்பவம் குறித்து பிரபல எழுத்தாளர் Amaruvi's Aphorisms தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்த தகவல்  தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது இதுகுறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :சென்னையில் இருந்து கோவை செல்ல 06627 ரயிலின் மூன்றடுக்குப் பெட்டியில் அமர்ந்திருந்தேன். என் தந்தையார் (81) ஏறியதில் இருந்து உறங்கத்துவங்கினார்.


17-19 வயது மதிக்கத்தக்க  பெண்கள் இருவர், ஆண்கள் எழுவர் கொண்ட குழு பெட்டியில் ஏறியது. நடனக் குழு போல் தோன்றியது.  எங்கள் இருக்கைக்கு அருகில் அவர்களது எண்கள். அடுத்த 4-5 இருக்கைகளும் அவர்களுக்கானவை. ஏறியதில் இருந்து உரத்த குரலில் காதில் வாங்க முடியாத கீழ்த்தரமான பேச்சுகள். ஒருவனது மடியில் ஒரு பெண் அமர்ந்தபடி. பிறிதொரு பெண் தனது மத சம்பந்தமான உடையைக் களைந்துவிட்டு சாதாரண உடையில் வந்தாள். அவர்களது உரையாடலில் அவளும் பங்கெடுத்தாள்.

ஒரு மூலையில் அமர்ந்தைருந்த என் கையில் இருந்த புத்தகம் பற்றி ஒருவன் கேட்டான். 'At the helm' என்பதை எழுத்துக் கூட்டி வாசித்தான். 'என்ன புக் அங்கிள் இது?' சொன்னேன்.மேலும் அருகில் வந்து அமர்ந்துகொண்டு 'நாங்க கொஞ்சம் ஜாலியா இருப்போம். நீங்க வேற சீட்டுக்குப் போறீங்களா?' என்றான். 'எனக்குப் பரவாயில்ல. பெரியவருக்கு உடம்பு சரியில்ல. அவர் தூங்கணும். அவர் விழுந்துடாம பார்த்துக்க நான் இங்கேயே இருக்கேன்' என்றேன். மது வாடை அவன் நாசியில் தெரிந்தது.

சில ஸ்பிரைட் பாட்டில்கள் திறக்கப்பட்டன. மது கலந்த பானம் என்பது தெரிந்தது.உரத்த குரலில் எழுத்தில் ஏற்ற முடியாத சொற்களைப் பேசிக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் சராசரி வயது  என் பெரிய மகனின் வயதை விடக் குறைவானது என்பது தெரிந்தது.  ஆணின் மடியில் அமர்ந்திருந்த பெண் பலராலும் தொட்டுப் பேசப்பட்டாள். ஆண் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டபடி தரக்குறைவாகவே பேசிவந்தான். 

தந்தையாரின் உறக்கம் கெட்டது.  அவர்கள் உணவுப் பொட்டலங்களைத் திறந்தார்கள். எங்கும் இரைத்தபடி பிரியாணி உண்டனர். அசைவத் துண்டுகள் உண்டு.அரை மணி நேரம் கழித்து, பானம் வேலை செய்யத் துவங்கியது போலும். 'நாமக்காரன் என்னடா புக்கு படிக்கறான்?' என்றான் ஒருவன். நான் திரும்பிப் பார்த்தேன். 'என்னா லுக்கு?' என்றான் வேறு பக்கம் திரும்பி. அவனது நண்பன் அவனை அமைதிப்படுத்தினான். 

சிறிது நேரம் அமைதி. பேச்சுகள் மீண்டும் துவங்கின. ஆபாசமான சொற்கள் பல. இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகள். ஒவ்வொருவனும் தனது முன்னாள் பெண் தோழியுடன் செய்த அக்கிரமங்கள் யாவை முதலியன. நல்ல வேளை என் தந்தையார் அரைத் தூக்கத்தில் இருந்தார்.'நாமக்காரன் ஏண்டா தூங்கறான்?' என்றான் முதல் காலி.  நான் எழுந்துகொண்டேன். 'உனக்கு என்னடா வேணும்? ஆர்.பி.எஃப். வரச்சொல்லவா?' என்றேன். அவனை மற்றவர்கள் அடக்கினர். 

அவ்வப்போது எழும் திடீர் கூக்குரல்களால் திடுக்கிட்டு எழும் தந்தையார் ஒருபுறம். ஆபாசமான சொற்களை உதிர்க்கும் ஆண்-பெண் வித்யாசம் தெரியாத காலிக்கூட்டம் மற்றொருபுறம். உறங்கலாம் என்று எழுந்தனர். மத உடை களைந்த பெண் நடுவில் உள்ள படுக்கை மீது கால்களை வைத்துக்  கொண்டு ஏறி நின்றபடி மேல் படுக்கையில் அமர்ந்திருந்த காலியின் சீண்டல்களை வாங்கிக்கொண்டிருந்தாள். இடையில் இரட்டை அர்த்தப் பேச்சுகள்.

பத்து நிமிடங்கள் கழித்தும் மேலே ஏறியவன், போதையில் கீழே விழுந்தான். இதய நோய்க்கான மருந்து உட்கொண்டிருந்த என் தந்தையார்  திடுக்கிட்டு எழுந்தார்.பொறுக்க முடியாமல், டிக்கெட் பரிசோதகரிடம் பணம் செலுத்தி, சட்ட பூர்வமாக ரசீது பெற்றுக்கொண்டு உயர் வகுப்பிற்குச் சென்றேன்.இந்த இரண்டு மணி நேரத்தில் புகார் செய்யலாமா என்று எண்ணினேன். தொடர்புகளைப் பயன்படுத்தியிருந்தால்   17-19 வயதுப் பிள்ளைகள் எதிர்காலம் வீணாகியிருக்கும்.  என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். 

பொது இடங்களில் நடந்துகொள்ளும் முறைகள் பற்றிய அடிப்படை உணர்வே இல்லாத  காலிக்கூட்டமாக ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்க்கிகொண்டிருக்கிறோம். மதுவால் ஒரு தலைமுறையையே பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பதிவை வாசிப்பவர்களில் அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் இருக்கக்கூடும். இருந்தால் பின்வரும் தகவல்கள் மூலம் உங்கள் பிள்ளைகள் அந்தக் கூட்டத்தில் இருந்தார்களா என்று  தெரிந்துகொள்ளுங்கள். வண்டி எண்: 06627 (MAS MAQ SPL) நாள்: 14-அக்டோபர்-2021 கோச்: B3 என குறிப்பிட்டுள்ளார் .

இளம்தலைமுறையினர் மதுவிற்கு அடிமையானது மட்டுமல்லாமல் பொது இடங்களில் மற்றவர்களின் பயணத்திற்கும் இடைஞ்சலாக இருக்கும் சம்பவங்கள் தற்போது தொடர் வண்டி பயணத்தின் போது தொடர்கதையாக மாறிவருகிறது , அதில் இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.