Tamilnadu

வெளியான பரபரப்பு "ஆடியோ" உறுதியானது அண்ணாமலை குற்றசாட்டு என்ன செய்ய போகிறார் சட்டம் ஒழுங்கு டிஜிபி?

annamalai and DGP
annamalai and DGP

ஆளும் கட்சியினர் மிரட்டலால் தற்கொலை செய்யபோவதாக உதவி காவல் ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோ தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது, அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாஜக அதிமுகவினர் குற்றம் சுமத்தி வரும் சூழலில் இதுபோன்ற ஆடியோ வெளியாகி இருப்பது  கடும் அதிவலைகளை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து சீனிவாசன் என்ற காவல் உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதாவது :நான் வேப்பங்குப்பம் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறேன். ஏலச்சீட்டு மோசடி சம்பவம் குறித்து, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் வழக்கு பதிவு செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர். வழக்கு பதிவு செய்யாத காரணத்தை, உயர் அதிகாரிகளிடம் கூறி விட்டேன்.


இங்கு மணல் கடத்தினால், வழக்கு பதிவு செய்யக்கூடாது என, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் டார்ச்சர் செய்கின்றனர். எனக்கு மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்னால் வாழ முடியவில்லை. அதனால், 29ம் தேதி இரவு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோவில் மிரட்டிய நான்கு, தி.மு.க., பிரமுகர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் படு வைரலாக பரவி வருகிறது இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர், குறிப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் சிறப்பு எஸ்.ஐ ஆடு திருடும் கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது பணியில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் ஆளும் கட்சியினர் மிரட்டலால் தற்கொலை செய்ய போகிறேன் என்று தெரிவித்து இருக்கும் தகவல் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து ஆளும் கட்சியினர் கைகளுக்குள் சென்று விட்டதாகவும் மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்களே காவல் நிலையங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு கூறியிருந்தார்.

தற்போது எஸ்.ஐ ஆளும் கட்சியினர் மிரட்டலால் தற்கொலை செய்ய போவதாக தெரிவித்து இருக்கும் சம்பவம் அண்ணாமலை கூறிய குற்றசாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.