
அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட 50% வரி, பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, உலக அரசியல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், டிரம்பிற்கு நேரடியாக எச்சரிக்கை அனுப்பும் வகையில் ஆசியாவின் மூன்று சக்திவாய்ந்த தலைவர்கள் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் – ஒரே மேடையில் கூடவிருக்கின்றனர்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவின் தியான்ஜினில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு, உலக அரசியலை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.ராய்ட்டர்ஸ் தகவலின்படி, சீன அதிபர் ஜின்பிங் தனிப்பட்ட முறையில் மோடி, புதினை வரவேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது மூன்று நாடுகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மிகப் பெரிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் இதுபோன்ற நடவடிக்கைகளால் உலக அரசியல் மெல்ல மாறி வருகிறது. ரஷ்யா இந்தியா இடையே பல காலமாக இருந்த நட்பு, டிரம்ப் அத்துமீறல்களால் இன்னும் வலிமையாகி இருக்கிறது. அதேபோல இந்தியா சீனா இடையே கல்வான் மோதலுக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்த சூழலில், அதுவும் மெல்லச் சீராகி வருகிறது. சமீபத்தில் கூட சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகளவில் வரிகளை விதித்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்தச் சூழலில் ஆசியாவின் 3 முக்கிய நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடுவது ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் புதின் மட்டுமின்றி, மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2001 முதல் இந்த ஷாங்காய் உச்சி மாநாடு நடக்கும் நிலையில், இது மிகப் பெரிய மாநாடாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 2024இல் கசானில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் ஜி ஜின்பிங்குடன் ஒரு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றிருந்தார். இருப்பினும், அது ரஷ்யாவில் நடந்த கூட்டமாகும். இப்போது தான் பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் முதல்முறையாகச் சீனாவுக்குச் செல்கிறார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும் என்று நம்புவதாகச் சமீபத்தில் தான் டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரக அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாக மோடி, புதினை நேரடியாக வரவேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தி சீனா-குளோபல் சவுத் ப்ராஜெக்ட் ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர் கூறுகையில், "அமெரிக்காவுக்கு எதிராக ஓரு போட்டி இருக்கிறது என்பதை இந்த மாநாடு மூலம் ஜின்பிங் காட்ட விரும்புவார். ஜனவரி முதல் சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், எதிலும் விரும்பிய முடிவுகள் அமெரிக்காவுக்குக் கிடைக்கவில்லை என்பதையே இந்த உச்சி மாநாடு காட்டுகிறது.
பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி டிரம்பிற்கு கவலை கொடுத்துள்ளது என்பது உண்மை. இதன் காரணமாகவே டிரம்ப் ஏதேதோ செய்து வருகிறார் இதுபோன்ற குழுக்களின் நோக்கம் அதுதான். இந்த உச்சிமாநாடு மிகவும் வலுவான பிம்பத்தை அமெரிக்காவுக்கு மெசேஜ்ஜாக அனுப்பும். டிரம்ப்பிற்கு சிக்கலைத் தான் கொடுக்கும்" என்றார்.