
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலக்கட்டத்தில் 45 ஆயிரம் டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதற்கான டெண்டர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. பல நிலைகளில் இந்த ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், அனைத்திலும் ஒரு ரூபாய் கூட மாறாமல் ஒரே விலையில் 30 ஒப்பந்தந்தாரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த டெண்டர் பணிகளில் முறைகேடு நடந்ததுள்ளதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் பல்வேறு ஒப்பந்ததாரர்களிடமிருந்து அவர்கள் குறிப்பிட்ட விலைப்புள்ளிகளை விட குறைந்த விலைக்கு மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாக அரசு கூறிக்கொள்ளும் போதிலும், வெளிச்சந்தையை விட அதிக விலை கொடுத்து தான் மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக 2021-ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டன. அதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 26 ஒப்பந்ததாரர்கள் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும் தான். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு இராஜஸ்தான் மாநில அரசு வாங்கியுள்ளது.
மின்மாற்றிகளை வாங்குவதில் திட்டமிட்ட கூட்டுச் சதி நடைபெற்றுள்ளது. ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50% கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும் சொல்லி வைத்தது போல ஒரே விலையை, அதுவும் சந்தை விலையை விட அதிக விலையை குறிப்பிடுவது இயல்பாக நடக்க வாய்ப்பில்லை. கூட்டு சதி நடந்தால் தான் இது சாத்தியம். ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த ஒப்பந்த ஏல நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்கள் குறிப்பிட்ட விலையில் சிறிதளவு குறைத்து மின்வாரியத்துக்கு பணத்தை மிச்சப்படுத்தியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு என்ற குற்றசாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில், 'டிரான்ஸ்பார்மர்' கொள்முதலில், 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, 'டான்ஜெட்கோ' எனப்படும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக சிவராமன் என்பவர், டில்லியில் உள்ள இந்திய போட்டி ஆணையத்தில் கொடுத்துள்ள புகார்:
இதில் பங்கேற்ற, 26 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியாக, 13 லட்சத்து, 72 ஆயிரத்து, 930 ரூபாய் என ஒரு மின்மாற்றியின் டெண்டர் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து சமர்ப்பித்து உள்ளனர்.மேலும், 26 ஒப்பந்ததாரர்களில், 16 பேருக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதுடன், சந்தை விலையை விட கூடுதலாக நிர்ணயித்து கொடுக்கப்பட்டதால் அரசுக்கு, 397 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே இந்த விவகாரத்தில், 'டான்ஜெட்கோ' மீதும் முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார்; செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. எனவே, மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்