24 special

முதலில் கண்டும் காணாமல் இருப்பார்கள் இது இலங்கை யோடு நிற்காது கிருஷ்ணசாமி விடுத்த எச்சரிக்கை!

krishnasamy and stallin
krishnasamy and stallin

அப்பன் முதலமைச்சர், மகன் முதலமைச்சர் பேரன் முதலைமைச்சர் என இருப்பது இலங்கையை போன்று தமிழகத்திலும் ஒரு நாள் ஒழிக்கப்படும் என தீவிரமாக கருத்து தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


அண்டை நாடான இலங்கையில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெட்ரோலிய பொருட்கள், பால் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது மட்டுமின்றி அபரிமிதமான விலையேற்றத்தின் காரணமாக அந்நாட்டு மக்கள் அல்லல்படுவது; அவதிப்படுவது குறித்து அறிந்து நாம் வருத்தப்பட்டது மட்டுமின்றி மொழி, இன பேதமின்றி இந்திய மக்கள் அவர்களுக்கு உதவிட வேண்டும் என முதல் முதலாகக் குரல் கொடுத்தோம்.

 ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரக்கூடிய வகையில் துவக்கத்தில் ஆங்காங்கே சில மென்மையான போராட்டங்களை மட்டுமே நடத்தி வந்த இலங்கை மக்களின் போராட்ட வடிவம் தற்போது அதிதீவிரமாகி இருக்கிறது. கடந்த நான்கைந்து தினங்களாக மக்கள் திரண்டு எழுந்து ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகளுக்கு தீ வைத்து சாம்பல் ஆக்குகிறார்கள். பலநாள் பதவியை விட்டு இறங்க மறுத்த மஹிந்த ராஜபக்சே பதவி விலக நேர்ந்துள்ளது.

இப்பொழுது பிரதமருக்கான இல்லத்தில் கூடக் குடியிருக்க முடியாமல் கப்பற்படை தளத்தில் உள்ள பதுங்கு குழியில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, அவருடைய சகோதரர்கள் மற்றும் அமைச்சரவையிலும் ஆட்சி - அதிகாரத்தின் உயர்நிலையில் உள்ள அவரது உற்றார் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோரின் இல்லங்கள் குறி வைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் வருகின்றன.

 ’அளவு மாற்றங்கள்தான் குண மாற்றங்களை நிகழ்த்தும்’ என்பது பௌதிக மற்றும் ரசாயனத்தில் உள்ள விதிகள் ஆகும். அது சமூகத்திற்கும் சாலப் பொருந்தும் என்பது இலங்கையில் நடந்து வரக்கூடிய இன்றைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

 கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிலவிவரும் பணவீக்கமும் பொருளாதார நெருக்கடியும் தங்களுக்கு எதிராகத் தான் போய் முடியும் என்பதை ராஜபக்சே குடும்பம் சிறிதும் கூட எண்ணிப் பார்க்க வாய்ப்பில்லை. குடும்ப ஆட்சி முறைகளையும் ஊழல் ஆட்சியாளர்களையும் மக்கள் துவக்கத்தில் கண்டும் காணாமல் தான் இருப்பார்கள். ஆனால் தங்களுக்கான அவலங்கள் எல்லா அதிகாரங்களையும் தங்களது குடும்பத்திற்குள்ளேயே வைத்திருக்கக்கூடிய ஆட்சியாளர்களாலும், அவர்களின் மிதமிஞ்சிய ஊழல்களாலும் தான் என்பதை உணர்கின்றபொழுது கண்மூடிக் கண் திறப்பதற்குள் மக்கள் கொதித்து எழுவார்கள் என்பதற்கு உலகத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் நடந்த புரட்சிகளே பெரும் சான்றுகளாகும்.

அதன் தொடர்ச்சியே இலங்கை சம்பவமும் ஆகும். கடந்த 15 வருடங்களாக ராஜபக்சே குடும்பமே இலங்கையின் ஜனாதிபதி பதவி, பிரதமர் அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுச் செயலாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் என முக்கியமான பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். அதுமட்டுமல்ல ஆட்சி - அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் அளவற்ற ஊழல், எல்லாவிதமான மதுபான ஆலைகளையும் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்குச் சொந்தமாகவே வைத்துக் கொண்டனர்.

மக்களுடைய வரிப் பணத்தைக் கோடி கோடியாக எடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நாடுகளில் முதலீடுகள் செய்தனர். அதனால் அவர்களை யாரும் அசைக்க முடியாது; அவர்களுடைய குடும்ப ஆட்சிதான் தொடரும் என்ற மதமதப்பில் மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சி-அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுடைய குடும்பத்தை வளப்படுத்திக் கொள்வதிலும் சுய விளம்பரத்திலும் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

 மக்களுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தாங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக நாள் கணக்கில் நிற்க வேண்டிய அவல நிலை, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 300 முதல் 500 வரை வாங்க வேண்டிய சூழல்கள்,  ஒரு ரொட்டியை ரூபாய் 1000 கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டதற்கு ராஜபக்சே குடும்பமும் - குடும்ப ஆட்சியும் தான் காரணம் என்பதை உணர்ந்து  பொறுமை இழந்திருக்கிறார்கள்.

எனவே, இன்று இலங்கை மக்களுக்குத் தீர்வு வேண்டுமெனில் அந்தக் குடும்பம் ஆட்சி - அதிகாரத்தை விட்டு முழுமையாக அகல வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த நான்கு மாத காலமாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் இப்பொழுது அனைத்து அதிகாரங்களையும் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கை மக்கள் தங்களுக்கு உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் இருந்தாலும்கூட அந்த மக்கள் கிளர்ந்தெழுந்து, ஒரு அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் துணிந்து நிற்கின்றனர் 

 ராஜபக்சே குடும்பத்தின் சிங்களப் பேரினவாத ஆட்சியின்கீழும்; அதற்கு முன்னரும் தங்களுக்கு அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமாக இப்பொழுது கொழும்பிலும் கண்டியிலும் நடந்து வரக்கூடிய போராட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் சற்று ஒதுங்கி இருப்பதாகவே தெரிகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய அரிய சந்தர்ப்பமாகவே கருத வேண்டியிருக்கிறது. எந்த ராஜபக்சே குடும்பம் தங்களுடைய அரசியல் மற்றும் குடும்ப லாபத்திற்காக சிங்கள பேரினவாதத்தைப் பயன்படுத்தினார்களோ இப்பொழுது அவர்களுடைய வீடுகள் மட்டுமல்ல, அவர்களுடைய அரசியல் சித்தாந்தங்களும் அவர்களுடைய ஊழல் சாம்ராஜ்யமும் அதே சிங்கள மக்களால் தீயிட்டுக் கொளுத்தப் படுகின்றன.

குடும்ப - ஊழல் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்நிகழ்வுகளை இலங்கையோடு மட்டும் தனித்துப் பார்க்கக் கூடாது. இந்தச் சம்பவங்கள் இலங்கையோடு மட்டும் நின்றுவிடும் என்றும் எண்ணி விடக் கூடாது. அது உலகத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பொருந்தும்; அது குறிப்பாக தமிழகத்திற்கும் பொருந்தும். ’நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைகள் இருக்கக் கூடாது; பரம்பரை மன்னராட்சி இருக்கக் கூடாது’ என்று தான் உலகத்தில் பெரும்பாலான புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையிலேயே ஜனநாயக ஆட்சியில் நாடாளுமன்றம் முறைகள் வழக்கத்திற்கு வந்திருக்கின்றன. ஆனால், இந்த நாடாளுமன்ற - ஜனநாயக முறைகளைப் பயன்படுத்திக்கொண்டு அப்பன் முதலமைச்சர், மகன் முதலமைச்சர், பேரன் முதலமைச்சர் எனத் தலைமுறை தலைமுறைகளுக்கும் பதவிகளைப் பட்டா போட்டுக் கொள்வதையும், ஆட்சி - அதிகாரத்தைப் பயன்படுத்தி திரைத்துறை, ரியல் எஸ்டேட், செய்தி ஊடகத்துறை, மதுபான உற்பத்தியென அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதும், குடும்ப ஆட்சிமுறையை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்துவிடலாம் என்ற எண்ணம் துவக்கத்தில் நல்லதைப் போலத் தோன்றும்.

ஆனால், அது காலப்போக்கில் இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வாகவே முடியும். 500 ரூபாய் கொடுத்துப் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாகக் கருதிக் கொண்டு இருப்பவர்களின் கனவுகளெல்லாம் கலையும். உண்மையான விடிவுகாலம் தமிழகத்திற்கு விரைவில் வரும்.

இலங்கையில் பற்றி எரியும் நெருப்பு அது வெறும் கட்டிடங்களுக்கானது அல்ல. குடும்ப ஆட்சி முறைக்கு எதிராகவும், ஊழல் சாம்ராஜ்யத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு விரோதமானதற்கும் எதிராக நடத்தக்கூடியவையே ஆகும். ’மாறும், இங்கு மாறும் எல்லாம் மாறும்’ என்ற விதியைத் தவிர, எல்லாமே மாறும்.கொழுந்து விட்டு எரியும் இலங்கை.! குடும்ப ஆட்சிகளுக்கு எச்சரிக்கை. என முடித்துள்ளார் கிருஷ்ணசாமி!