
அமெரிக்காவின் “America First” கொள்கைக்கு இணையாக, இந்தியாவின் இறையாண்மையையும் சுயசார்பையும் உலக அரங்கில் உரக்கச் சொல்லும் “India First” என்ற தெளிவான, கம்பீரமான நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், தற்போதைய புவிசார் அரசியலில் இந்தியாவின் அசைக்க முடியாத பலத்தையும், அதன் ராஜதந்திர முதிர்ச்சியையும் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
எந்தவொரு உலகளாவிய அழுத்தங்களுக்கும் பணியாமல், “இந்தியா எப்போதும் தனது தேசிய நலனையே முதலில் பார்க்கும்” என்று அவர் குறிப்பிட்டது, புதிய இந்தியாவின் மாஸான மற்றும் துணிச்சலான வெளியுறவுக் கொள்கையின் பிரதிபலிப்பாகும். அமெரிக்கா தனது சொந்த நலன்களை முன்னிறுத்துவதைப் போல, இந்தியாவும் தன் மக்களின் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்குமே முதலிடம் கொடுக்கும் என்பதை அவர் சமரசமின்றி சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில், இந்தத் தனித்துவமான தேசிய நலன்களுக்கு மத்தியிலும், இரு வல்லரசு நாடுகளும் பரஸ்பர மரியாதையுடன் இணைந்து செயல்படக்கூடிய பல முக்கிய துறைகள் மற்றும் பொதுவான இலக்குகள் இருப்பதை அவர் சுமுகமாக உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.
மேலும், குவாட் (QUAD) கூட்டமைப்பின் வியூக முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், வருங்காலத்தில் உலக அரசியலின் மின்காந்த மையமாக ‘இந்தோ-பசிபிக்’ (Indo-Pacific) பிராந்தியம் உருவெடுக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கணித்துள்ள இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து அங்குள்ள சவால்களை எதிர்கொள்ளவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் தயாராக இருக்கிறது என்பதை இந்த சந்திப்பின் மூலம் ஜெய்சங்கர் அதிரடியாகவும் மிக ஆணித்தரமாகவும் உலக மேடையில் பதிவு செய்துள்ளார்.
அதேவேளையில், இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச நலன்கள் மற்றும் அதன் தனித்துவமான வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசிய அவர், "இந்தியாவின் உலகளாவிய நலன்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பு நாடுகளுடனும் நாங்கள் சுமுகமான உறவைக் கொண்டுள்ளோம். உதாரணமாக, தற்போதைய உக்ரைன் மோதலில் கூட இதை நாம் பார்க்க முடிகிறது. ஒருபுறம் ரஷ்யாவுடன் எங்களுக்கு மிகவும் பலமான உறவு உள்ளது; மறுபுறம் ஐரோப்பா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனும் நாங்கள் நல்லுறவைப் பேணி வருகிறோம். இப்போது எழும் கேள்வி என்னவென்றால், இவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நாம் எவ்வாறு கையாள்வது என்பதுதான்? அந்த வகையில், இதை நிச்சயமாக பன்முகக் கூட்டணி (Multi-alignment) என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இன்றைய இந்தியாவின் பரந்து விரிந்த நலன்களானது, ஒரே நேரத்தில் பலதரப்பட்ட உலக நாடுகளுடனான உறவுகளையும் திறம்பட நிர்வகிக்க வேண்டிய தேவையை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது" என்று இந்திய வெளியுறவுக் கொள்கையின் மாஸான பன்முகத்தன்மையை உலகிற்கு மிகத் தெளிவாக விவரித்துள்ளார்.
