
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் : விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு பறக்க தொடங்கிய பிறகு,போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் பறவைகள் மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே விமானம் விபத்திற்குள்ளான வீடியோவை ஆய்வு செய்த பிரபல ஏவியேஷன் வல்லுநர் விமானத்தில் அசாதாரண சூழல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளார். விமானம் விபத்திற்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.அதில் விமான விபத்து தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்ட ஆய்வில் விமான விபத்தின் வீடியோவை பார்க்கும்போது விமானத்தின் அமைப்பு மற்றும் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுவாக, விமானம் மேலே எழும்பி சில நொடிகளில், அதாவது 600 அடியை அடைவதற்கு முன்பே லேண்டிங் கியர் மூடப்பட வேண்டும். ஆனால், ஏர் இந்தியா விமானம் 600 அடியைத் தாண்டியபோது தான் விபத்தில் சிக்கியது. ஆனால், அதுவரை விமானத்தின் லேண்டிங் கியர் அப்படியே இருந்ததும் பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
ஒருவேளை இயந்திரக் கோளாறு அல்லது ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக லேண்டிங் கியர் உள்ளேஇழுக்கப்படாமல் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், அதிகப்படியான இழுவை காரணமாக விமானத்தின் வேகம் குறையும் என்பதால், விமானிகள் இறக்கைகளைச் சீக்கிரம் மூட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், விமானம் குறைந்த உயரத்தில் பறக்கும்போது இறக்கைகளை வேகமாக மூடுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இது விமானத்தின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்.
இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், விமானம் நிலையாகவே பறந்துள்ளது. விமானிகள் கட்டுப்பாட்டை இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும், விமானத்தில் வலது எஞ்சின் பழுதடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஆனால் அப்படியே எஞ்சின் பழுதடைந்து இருந்தாலும் கூட லேண்டிங் கியர் இறக்கப்பட்ட நிலையிலும் இறக்கைகள் மூடப்பட்ட நிலையிலும் ஏன் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஏனெனில் விமானம் நார்மலாக இருந்திருந்தால் லேண்டிங் கியரும், இறக்கைகளும் இந்த நிலையில் இருக்கக் கூடாது என்கிறார் நாகார்ஜுன் துவாரகாந்த். உரிமம் பெற்ற கம்ஷியல் பைல்ட்டான இவர் இந்தியா டூடே செய்தி சேனலில் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
600 அடி உயரத்தில் லேண்டிங் கியர் இறக்கப்பட்டும், இறக்கைகள் மூடப்பட்டும் இருந்தது மிகவும் வினோதமான நிகழ்வு. இது தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமானியின் அவசரக்கால நடவடிக்கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போதுமான வேகம் இல்லாததாலும், அதிகப்படியான இழுவை ஏற்பட்டதாலும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இருப்பினும், இது உறுதியான தகவல் இல்லை. மேலும், இதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.